மதுரை: பட்டாக்களை ரத்து செய்ய எவ்வளவு கால அவகாசம்; ஐகோர்ட் கேள்வி

மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த மனு: மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கோமதிபுரம் வரை 2.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது. இதற்காக வண்டியூர் கண்மாயை சேதப்படுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கும், வண்டியூர் கண்மாயில் மேம்பாலம் கட்டுமான பணிக்கும் தடை விதிக்க வேண்டும் என மனு செய்தேன். மார்ச் 7ல் இரண்டு நீதிபதிகள் அமர்வு, 'திட்டப் பணியை செயல்படுத்த விதித்த தடை நீக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது. 

மேலும், 'தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழுமையான பட்டியலை கொண்ட தனி இணையதளத்தை அரசு 6 மாதங்களில் துவக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய பின் அகற்ற வேண்டும். 2000 ஜன.1க்குப் பின் நீர்நிலைகள் தொடர்பாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்' என்றார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை ஒட்டுமொத்தமாக நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி