மதுரை: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளை முட்டி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஆட்சியர் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தார். தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசின் உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

 இதில் கடந்த ஜன. 14-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார், கடந்த பிப். 12-ஆம் தேதி கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அலங்காநல்லூர் பாண்டி, கடந்த 16-ஆம் தேதி கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மகேஷ்பாண்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.

 மேலும், வாடிப்பட்டி வட்டம், டி. ஆண்டிப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவு நீர்க் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை கேசவனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச. அன்பழகன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் ர. த. சாலினி, அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி