மதுரை: ஓட்டுநரை செருப்பால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்ட்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டு சென்றபோது திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. பேருந்தை எடுப்பதற்கு தாமதமான நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டுமே பேருந்து எடுத்துச் செல்ல முடியும் என கூறியுள்ளார். 

பின்னர் பயணிகள் நேரடியாக போக்குவரத்து துணை மேலாளரிடம் விரைவாக எடுக்குமாறு கூறியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா என பயணிகளை இழிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையே அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை அலுவலகத்திற்குள் அழைத்து சென்று உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென தனது செருப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

நீ என்ன பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா என கூறியபடி செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி