தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முக்கியமான 102 திட்டங்களை போற்றும் வகையில் திட்ட பணிகள் நடைபெற்ற இடத்தில் இன்று அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள மாயனூர் கதவணை டெல்டா விவசாயிகளின் முக்கிய திட்டமாக உள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் இன்று கதவணை அமைந்த பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்த நாளை சிறப்பித்தனர்.