கரூர்: நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை ரத்து செய்ய கோரி, நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்டத் தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, நொய்டாவில் கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாய தலைவர் ஜகஜித் சிங் தலேவாலின் 20 நாட்களுக்கு மேலாக இருந்து வரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விவசாய அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

விவசாயிகள் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது நகலை எரிக்க முயன்ற 20க்கும் மேற்பட்ட விவசாயி சங்கப் பிரதிநிதிகளை மாயனூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி