கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மணவாடி கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாங்கி உள்ளார்.
தற்போது அந்த வீடு காலியாக உள்ள நிலையில், டிசம்பர் 27 இரவு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத 2 கொள்ளையர்கள் மதில் சுவர் மீது ஏறி குதித்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மேலே இருந்து கீழ்ப்பக்கமாக திருப்பி வைத்து, கத்தி, கடப்பாரையை பயன்படுத்தி வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளனர்.
அந்த வீட்டில் டிவி, பிரிட்ஜ், சோபா, கட்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் இருந்தது. கொள்ளையர்கள் எதிர்பார்த்தது போல நகை, பணம் எதுவும் இல்லாததால், கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது குறித்து, முருகன் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.