கரூரில் கடையின் பூட்டை உடைத்து திருடியவர் கைது

கரூர், ஆண்டாங் கோவில், மருத்துவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (30). இவர் கரூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் ஜூன் 11ஆம் தேதி இரவு 11:45 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பிறகு மறுநாள் காலை ஜூன் 12ஆம் தேதி காலை 8 மணி அளவில் கடையை திறக்க முற்பட்ட போது, கடையின் கதவை உடைத்து கடையில் வைத்திருந்த மூன்று ஆண்ட்ராய்டு செல்போன்களையும் ரூபாய் 1200ஐயும் களவாடி சென்றது தெரியவந்தது. 

இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமாரபாளையம், காமராஜர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சீனி என்கிற சீனிவாசன் வயது 35 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து களவாடிய மூன்று செல்போன்களை மீட்டனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜூன் 26ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி