கரூர்: டூ வீலர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..இருவர் படுகாயம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுக்காலியூர் அருகே சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சஞ்சய் (வயது 19). இதேபோல் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், மேலப்பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). இவர்கள் இருவரும் ஜூன் 1-ம் தேதி மதியம் 2:30 மணி அளவில், ஈரோடு - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். 

டூவீலரை சஞ்சய் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் குட்டைக்கடை அருகே சென்றபோது, எதிர்த் திசையில் கரூர் மாவட்டம், புகலூர், பாலத்துறை பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 23) என்பவர் வேகமாக ஓட்டி வந்த மினி டிப்பர் லாரி, சஞ்சய் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலர் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சய் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மினி டிப்பர் லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரவீன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி