கரூர்: தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம், 5-வது தெருவைச் சேர்ந்த மகேஷ்பாபு மனைவி காவேரி வயது 51. இவர் கரூர்- கோவை செல்லும் அரசு பேருந்தில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு 2:30 மணி அளவில் பயணம் செய்து கொண்டு இருந்தார். 

இவரைப் போலவே கும்பகோணத்தைச் சேர்ந்த சத்யா 31, இவரது மகள் தனுஷ்ஸ்ரீ 5, தஞ்சாவூரைச் சேர்ந்த அபிநயா 16, சௌமியா 25, லட்சுமி 49, திண்டுக்கல்லைச் சேர்ந்த பழனிஜோதி, கோவையைச் சேர்ந்த ராம்பிரசாத் 34, தஞ்சாவூரைச் சேர்ந்த குமார் 56, திருப்பூரைச் சேர்ந்த அருண் 32 ஆகியோர் பயணித்தனர். பேருந்து கரைப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம், கருங்களத்தூரைச் சேர்ந்த முருகன் 35 என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து, எவ்வித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி இருந்ததால், அரசு பேருந்து தனியார் பேருந்து பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் மேலே குறிப்பிட்ட 10 பேரும் படுகாயம் அடைந்ததால், உடனே இவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக காவேரி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட தென்னிலை காவல்துறையினர், தனியார் பேருந்தை விபத்து ஏற்படும் வகையில் நிறுத்தி இருந்த முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி