மீண்டும் உடைந்த மார்த்தாண்டம் மேம்பாலம்.. பொதுமக்கள் பீதி

குமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து பம்மம் என்ற பகுதி வரை ரூபாய் 222 கோடி செலவில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேம்பாலம்  அமைக்கப்பட்டது. தற்போது வரை இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தும் நிலையில் கடந்த மே மாதம்  9-ம் தேதி அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேற்பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் அடியில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்தது.

இதனால் பாலத்தின் வழியாக வாகனங்களோ பொதுமக்களோ கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மேம்பாலத்தை சமூகவிரோதிகள் உடைத்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினரும், பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ், திமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர்.  பின்னர் இயந்திரங்கள் உதவியுடன் சேதம் அடைந்த பகுதியை அகற்றும் பணியை மேற்கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது.  

இந்த நிலையில் இன்று (2 -ம் தேதி) மீண்டும் பாலத்தின் நடுப்பகுதி உடைந்து சேதமாகியுள்ளது. சேதப் பகுதியில் பேரி கார்டு வைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி