மார்த்தாண்டம்: கடையில் தீ  விபத்து; பெருட்கள் சேதம்

மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (29). இவர் சிராயன்குழி பகுதியில் ஷோபா செட் தயாரிக்கும் கடையை நடத்தி வருகிறார். நேற்று மாலை தனது கடைக்குப் பின்புறம் உள்ள குப்பைகளை தீயிட்டுக் கொழுத்தினார். நீண்ட நேரம் எரிந்த பின் தீயை தண்ணீர் விட்டு அணைத்துள்ளார். இரவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். 

ஆனால் அஜித் தீயணைத்த குப்பையில் காற்றின் வேகத்தால் மீண்டும் தீப்பிடித்து உள்ளது. இதனை அவர் கவனிக்கவில்லை. இந்தத் தீப்பொறிகள் கடைக்குள் வந்து, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஷோபா செட்டுகளில் விழுந்துள்ளது. இதில் தீப்பிடித்து கடை எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு கடை உரிமையாளருக்கும், உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற கடைகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் அஜிதின் கடையில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் கருகி நாசமானது. சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி