கோதையாறு: நீர் மின் உற்பத்தி நிலையம் அருகில் திடீர் மண் சரிவு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மலையோர கிராமங்களில் கடுமழை பெய்தது. இதை அடுத்து இன்று காலை 11.30 மணியளவில் குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் மின் நிலையமான கோதையாறு நீர் மின் நிலைய பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. 

இதனால் அந்த பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு, ஜெனரேட்டர் போன்றவை சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்தவுடன் உடனடியாக நீர் மின் நிலைய அதிகாரிகள், அங்குள்ள பணியாளர்கள், போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு தொடர்ந்து சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி