இரணியல்:   தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

இரணியல் ரயில் நிலையத்தில் இன்று (மார்ச் 20) அதிகாலை வழக்கம்போல் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.55 மணிக்கு ரயில் நிலையம் வந்தது. 5 நிமிடம் பயணிகளை ஏற்றிவிட்டு ஐந்து நிமிடங்களில் ரயில் புறப்பட்டது. 

ரயில் மெதுவாக புறப்பட்டு பிளாட்பாரம் முடிவடையும் பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் கற்கள் இருப்பதை ரயிலின் லோகோ பைலட் கவனித்தார். உடனடியாக அவர் ரயிலை நிறுத்திவிட்டார். இதை அடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு சிறிய கற்களை அகற்றினார்கள். 

பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த பரசுராம் ரயிலுக்கு முன்பு அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இந்த தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. 

இதனால் இந்த நாசவேலை அதிகாலை 1.45 மணிக்குப் பிறகுதான் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி