கொளத்தூரில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் மறைமலைநகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி, மூங்கில் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர்வழித்தடத்தில், மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுவாச பிரச்னை, நோய் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதால், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கொளத்தூர் கிராமவாசிகள் கூறியதாவது: நீர்வழித்தடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் நீர்நிலைகள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து எரிக்கப்படும் மருத்துவ கழிவுகளின் கரும்புகை காற்றில் பரவி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு வருகிறது. 

பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி