காஞ்சியில் 554 மகளிர் குழுவினருக்கு ரூ. 60 கோடியில் கடனுதவி

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனுதவிகளை, சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க. எம்.பி. செல்வம் பங்கேற்று, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை வழங்கினார். 

மகளிர் திட்டத்தை பொறுத்தவரையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுயஉதவிக் குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுயஉதவிக் குழுக்களும் என, மொத்தம் 9,374 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இதில், 1,12,880 பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மகளிர் குழுக்களுக்கு, 2024-25ல், 694 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது முழுமையாக கடனுதவி வழங்கி இலக்கு எட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 548 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 60 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை, தி.மு.க. எம்.பி. செல்வம் நேற்று வழங்கினார். மேலும், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் 6 மகளிர் குழு பயனாளிகளுக்கு, 3.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் என, மொத்தம் 554 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி