செங்கல்பட்டு: இரட்டை கொலை.. மூவருக்கு 'குண்டாஸ்'

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்தூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் விமல், 21. இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 21. இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் கடந்த 11ம் தேதி அதிகாலை, காந்திநகர் பிரதான சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளிகளான திருநங்கை ஒருவர், 17 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேரை, ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நவீன், 19, நந்தகுமார், 23, யுகேஷ், 19, உள்ளிட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும், செங்கல்பட்டு மாவட்ட சிறையிலிருந்து, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான ஆணையை, மறைமலைநகர் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி