செங்கல்பட்டில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவரும், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இந்துமதி, 27, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து, ஒன்றரை ஆண்டுக்கு முன், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, செங்குன்றத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லாததால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை இந்துமதி டீ போட்டு, மணிகண்டனை எழுப்ப சென்ற போது, தம்பதியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த இந்துமதி, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இந்துமதியை மீட்ட மணிகண்டன், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மறைமலை நகர் போலீசார் இந்துமதி உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை மறைமலை நகர் காவல் நிலையம் வந்த இந்துமதியின் உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மணிகண்டன் மற்றும் அவரது தந்தை இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி