தாம்பரம் அருகே மின்சார ரயில் மோதி இருவரும் உயரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று நள்ளிரவில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார் கை, கால், தலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த ஆண் சடலம் மற்றும் ஒரு பெண் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாம்பரம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவரும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பவரும் என தெரியவந்தது. 

மேலும் இவர்கள் இருவரும் வண்டலூர் அருகே தங்கி தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் காதலித்து வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பேசிக்கொண்டு கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி