மறைமலை நகரில் பிரியாணி கடை ஊழியரை தாக்கிய 5 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் உரிமைநாதன், இவர் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நியூ ஆற்காடு பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி பிரியாணி கடைக்கு வந்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சச்சின், 19. அவரது நண்பர் தமிழ்செல்வன், 20. பிரியாணியை ஓசியில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றபோது கடையில் இருந்த ஊழியர்கள் சாப்பிட்ட பிரியாணிக்கு பணத்தை கொடுத்துவிட்டு போகுமாறு தெரிவித்துள்ளனர்.

 இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பணம் தராமல் அங்கிருந்து இளைஞர்கள் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் வந்த சச்சின் எங்களிடமே சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்கிறீர்களா என இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 

தடுக்க முயன்ற அனைவரையும் கொடூரமாக இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து உரிமைநாதன் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சச்சின், 19. சந்துரு, 27. சூர்யா, 23. தினேஷ், 27. சுபீஷ், 18. உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி