வீடு கட்ட விடாமல் தடுக்கும் ஊர் தலைவர் - பெண் போராட்டம்

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கூட்டம், நேற்று (அக் 1 )நடந்தது. கூட்டரங்கு வெளியே, காவித்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, (60), என்பவர், பெட்ரோல் கேனுடன் அமர்ந்திருந்தார்.

உடனடியாக, கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை தடுத்து, போராட்டம் பற்றி விசாரித்தனர். கூட்டரங்கு உள்ளே இருந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, வெளியே வந்து, போராட்டம் நடத்திய காமாட்சியிடம் விசாரித்தார். பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், பெண் வைத்திருந்த பெட்ரோல் கேனை பறித்து வீசினர்.

அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, காமாட்சி கூறியதாவது: உத்திரமேரூர் தாலுகா, காவித்தண்டலம் கிராமத்தில், மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த எங்களது நான்கு குடும்பங்கள், 23 ஆண்டுகளாக, இதே கிராமத்தில் வசிக்கிறோம். ரேஷன் கடை, ஊர் மேடைகளிலும் தங்கி குடும்பம் நடத்துகிறோம்.‌ ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் இடம் ஒதுக்கி, எங்களுக்கு பட்டா வழங்கி, 4 ஆண்டுகளாகிறது.

ஆனால், ஊர் தலைவர் வீடு கட்ட விடாததால், இதுவரை வீடு கட்ட முடியாமல், மழை, வெயிலில் சிரமப்படுகிறோம். மாற்று இடம் தருகிறோம் என, தாசில்தார் கூறியும் நடவடிக்கை இல்லை. மாற்று இடம் வழங்கி, வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி