மதுராந்தகம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள 5 திருக்கோவில்களுக்கு ஒரே நாளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன், ஸ்ரீ வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானை, ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கோவில், பொன்னியம்மன் திருக்கோவில், கன்னிமார் கோவில் ஆகிய ஐந்து கோவில்களுக்கு இன்று ஒரே நாளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, நவகிரக பூஜை என முதல் கால யாக பூஜைகளுடன் தொடங்கி இன்றுடன் நான்கு கால பூஜை செய்யப்பட்டு, நான்காம் நாளான இன்று பூர்ணாதி பரிவார தெய்வங்கள், அஷ்ட தெய்வங்களுக்கும் அனைத்து கால பூஜைகளும் செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு சரியாக 11 மணியளவில் இந்த ஐந்து கோயில்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகம், மகா தீபாரதனை விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.