அடிக்கடி பழுதாகம் மதுராந்தகம்--ஆலிக்குப்பம் பஸ்; பயணிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன. மதுராந்தகத்திலிருந்து அருங்குணம் வழியாக ஆலிக்குப்பம் பகுதிக்கு, தடம் எண்: '10ஏ' பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று, அதிகாலை 4:30 மணியளவில், ஆலிக்குப்பத்திலிருந்து கிளம்பி மதுராந்தகம் செல்ல வேண்டிய பேருந்து, காலையில் ஓட்டுனர் இயக்க முற்பட்டபோது, 'மக்கர்' செய்துள்ளது. 

பின், மதுராந்தகம் போக்குவரத்துப் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணியாளர்கள் சென்று பேருந்தில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேருந்து பயணியர் கூறியதாவது: ஆலிக்குப்பத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் பேருந்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் மதுராந்தகம் பகுதிக்கு வேலைக்குச் செல்வோர் என, பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆலிக்குப்பத்திலிருந்து, நாள்தோறும் மதுராந்தகத்திற்கு மீன் எடுத்துச் சென்று, வியாபாரம் செய்யும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

 இதுகுறித்து பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. துறைசார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து, நல்ல முறையில் இயங்கும் பேருந்தை ஆலிக்குப்பம் பகுதிக்கு இயக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி