இங்கு நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள ஆள் கிடைக்காத நிலை இருந்து வந்தது. பெரும்பாலானோர், 100 நாள் பணிக்கும், செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற நகரப் பகுதிகளுக்கு அதிக சம்பளத்திற்கு வேலைக்கு சென்று விடுவதால் நாற்று நடவு பணி மேற்கொள்ள ஆட்களின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். மேற்கு வங்கம், பீஹார் மாநிலத்தில் இருந்து, ஏஜென்ட் வாயிலாக, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், படாளம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள், கடந்த சில தினங்களாக, நாற்று நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பூதுார் விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் நாற்று நடவு செய்தால், 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் 5 கிலோ அரிசி, 1 கிலோ காய்கறி, ஒரு கேஸ் சிலிண்டர் வழங்குகிறோம். இங்குள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் ஏக்கருக்கு, 10,000 ரூபாய் கூலி கேட்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.