செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயிலில் திருத்தேர்விழா

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழைமையான கோயில் ஆகும். 

இந்த ஆலயம் மலையை குடைந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்டு நெற்றியில் ஒரு கண்ணோடு அமையப்பெற்ற பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் என திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நரசிம்மர் பெருமாளை வைத்துத்தான் இப்பகுதிக்கு சிங்கபெருமாள் கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 31ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்மர் பெருமாள் அமர்ந்து வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

அதன் தொடர்ச்சியாக 7ஆம் திருநாளான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் நரசிம்மர் மற்றும் அகோபிலவள்ளி தாயார் சமேதமாக தேரினுள் அமர்ந்து திருத்தேர் வீதி உலா சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழங்க பெருமாளின் ஆசியினை பெற்று மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி