மதுராந்தகத்துடன் இணைப்பதா? கருணாகரவிளாகத்தினர் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரவிளாகம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உடையது. இதில், மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரவிளாகம் கிராமத்தை, மதுராந்தகம் நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக, இந்த கிராமத்தினர் அறிந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டோர், நகராட்சி அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளனர். 

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கருணாகரவிளாகம், 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் சிறு கிராமம். விவசாயம் மற்றும் விவசாய கூலி பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும், மொறப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரிடம் முறையிடுகிறோம். அவர்கள், எங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்கின்றனர். எனவே, தற்போது உள்ள நிலையிலேயே கிராமம் இருக்க வேண்டும். நகராட்சியில் இணைய விருப்பம் இல்லை. இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

இதுகுறித்த மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி பொறியாளர், மனு குறித்து கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி