இதை முன்னிட்டு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநில பக்தர்கள், ஒரு மாதத்திற்கு மேல் மருவத்தூரில் குவிகின்றனர். பின், ஸ்ரீதலசயன பெருமாள் வீற்றிருக்கும் மாமல்லபுரம் கடலிலும் நீராட, மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குழுவாக வரும் அவர்களில் பெரும்பாலானோர், மாமல்லபுரம் சாலை பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி, இரவில் பேருந்திலேயே உறங்குகின்றனர். சாலையோர திறந்தவெளியில், கேஸ் சிலிண்டர் அடுப்பில் சமைக்கின்றனர்.
சாலையிலே சாப்பிட்டு முடித்து உணவு கழிவுகள், சாப்பிடும் காகித தட்டுகள், தண்ணீர் குவளைகள் ஆகியவற்றை கண்ட இடங்களில் குவிக்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கேஸ் சிலிண்டர் அபாயத்தால், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், கர்நாடக பக்தர்கள் மீது மோதும் அபாயமும் உள்ளது.