ஐந்து ரதம் சிற்பங்கள், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கைவினைப் பொருட்கள் வணிக வளாகம், பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை போன்றவை இப்பகுதியில் உள்ளன. பல சிற்பக்கூடங்களும் இயங்குகின்றன.
இப்பகுதி சுற்றுலா முக்கியத்துவத்துடன் உள்ள நிலையில், மின் தடை, மின்னழுத்தம் குறைவு என, அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
பேரூராட்சிப் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு நிதியில் ஒருங்கிணைந்த மின்சார மேம்பாடு செயல்படுத்தப்பட்டது.
அண்ணா நகர் மின் வினியோக பாதிப்பை தவிர்க்க, ஐந்து ரதங்கள் சாலை பகுதியில், 100 கி. வா. , மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் மின் வினியோகம் சீரானது.
ஒரே மாதத்தில், அதன் மின் சாதனங்களை அகற்றி, வேறு பகுதியில் அமைக்கப்பட்ட வேறு மின் மாற்றியில் பொருத்தப்பட்டது.
இதனால், இப்பகுதியில் மின்மாற்றி இல்லாமல், வெற்று கம்பம் மட்டுமே காட்சிப்பொருளாக உள்ளது. மின் வினியோக பாதிப்பு நீடித்து வருகிறது.
சீரான மின் வினியோகம் இல்லாமல் பாதிக்கப்படும் மக்கள், மீண்டும் மின் மாற்றி அமைக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.