காஞ்சியில் மொபைல் ஆப் மூலம் சீனியர் சிட்டிசன் பயன்பெறலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக மொபைல் ஆப் உள்ளது. அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்களுக்காக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் செப்டம்பர் 2023-ல் தொடங்கி வைக்கப்பட்டது. 

மூத்த குடிமக்கள் இந்த மொபைல் ஆப்பில், மூத்த குடிமக்களுக்கு தேவையான சேவைகள் இடம்பெற்றுள்ளன. அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள், மூத்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் மொபைல் போனில், உள்ள பிளே ஸ்டோர் வழியாகவோ அல்லது Seniorcitizen.in இணையதளம் வழியாகவோ பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி