மது பாட்டில் கொள்ளையர்கள் கைது

உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம், அரசு மதுபானக் கடையில், கடந்த மார்ச் 1ம் தேதி, கட்டட சுவரை துளையிட்டு, 107 அட்டைப் பெட்டிகளில் இருந்த, 8.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு மது பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக அந்த கடையின் மேற்பார்வையாளர் தயாளன் அளித்த புகாரின்படி, சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் வயது 19, விஸ்வா வயது 20, மற்றும் ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது 26 ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஒன்றியம், கடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோகன் குமார் வயது 44, என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர், செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் காவல் நிலையத்தில், கொலை மற்றும் கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கடுக்கப்பட்டு கிராமத்தில் மோகன்குமார் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, காஞ்சிபுரம் எஸ். பி. , சண்முகம் உத்தரவின் பேரில், வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று மோகன்குமாரை கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று(செப்.4) வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி