திருக்கோவிலுார்: விபத்தில் 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் மணிவண்ணன் (19); விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்லவாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (55) விவசாயி. இருவரும் நேற்று (பிப்.16) அதிகாலை 5:30 மணியளவில் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், தானிப்பாடி சந்தையில் விற்பனை செய்வதற்காக கத்தரி மற்றும் தக்காளி செடிகளை எடுத்துச் சென்றனர். 

பைக்கை மணிவண்ணன் ஓட்டினார். திருக்கோவிலூர் - ஆசனூர் சாலையில், செங்கனாங்கொல்லை அருகே சென்றபோது, திருக்கோவிலூரில் இருந்து கொல்லிமலைக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுற்றுலா சென்ற வேன் மோதியது. விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் பைக்கில் சென்ற மணிவண்ணன், ராமச்சந்திரன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேன் கவிழ்ந்ததில் வேன் டிரைவர், திருக்கோவிலூரை சேர்ந்த ஜம்புலிங்கம் (45); என்.ஜி.ஓ., நகர் சரவணன் மனைவி ராஜேஸ்வரி (45); விஜயலட்சுமி (65) உட்பட 13 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி