சின்னசேலம்: அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொதுமக்கள் வழங்கல்

சின்னசேலம் வட்டம், வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் கல்வி சீர்வரிசையை மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலிகள், மின் விசிறிகள் மற்றும் விளக்குகள், பக்கெட், துடைப்பம், சாக்பீஸ் பெட்டிகள், குப்பைக்கூடை, கழிவறை பொருட்கள், கரும்பலகை பெயிண்ட் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க் கொடி தலைமை தாங்கினார். 

ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன், துணைத்தலைவர் தனம் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஜான்சி ராணி, கல்வியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். 

வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, ராஜசேகர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ஆசிரிய பயிற்றுனர் அனுராதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி