ஈரோடு: போலி மது விற்றவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாச்சியப்பா வீதி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தபோது அங்குள்ள லாட்ஜ் ஒன்றின் அருகில் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. 

போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், அந்த பாட்டில்களில் போலியான ரசாயன கலர் பவுடரை கலந்து, பிராந்தியை போல் தயார் செய்து, அதை அரசு மது பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த மது வழக்கத்துக்கு மாறாக விஷ நெடியுடன் இருந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் போலி மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு, சத்தி ரோடு, கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (54) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 700 மதிப்பிலான 5 போலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி