ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு திருநகர் காலனி பகுதியில் உள்ள மளிகை கடை, டீ கடை என 15க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சிவா எண்டர் பிரைசஸ், வாகீஸ் பிளாஸ்டிக் ஆகிய இரண்டு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுகாதார ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட இரண்டு கடை உரிமையாளர்களுக்கு, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று, காவேரி சாலையில், வேல் மார்ட் என்ற மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.