ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28ஆம் தேதி 11 பவுன் நகைக்காக மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பழைய குற்றவாளிகள் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டனர். போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் அவர்களுக்கு நகையை உருக்கி கொடுத்த சென்னிமலையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பெயரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மூவர் கொலையை இவர்கள்தான் செய்தது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் எழுமாத்தூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜயகுமார் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவரது உத்தரவுப்படி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் எழுமாத்தூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் நால்வரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் வரும் 6-ந் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.