ஈரோடு: சரக்குவேன் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஈரோடு -சத்தி மெயின் ரோடு, நாயக்கன் காட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னால் ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் சரக்கு வேன் திடீரென திரும்பியது. இதை எதிர்பார்க்காமல் ஜாகிர் உசேன் சென்ற மோட்டார் சைக்கிள் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜாகர் உசேன் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரது நண்பர் ரவிக்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஜாகிர் உசேனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஜாகிர் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தார். ரவிக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி