கோபி: ஸ்பின்னிங் மில்லில் திருடிய 3 பேரை விரட்டிபிடித்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. இந்த மில்லில் காவலாளி ஜெயராமன் (55) என்பவர் இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று (ஜனவரி 2) நள்ளிரவில் மில்லின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த 4 பேர் மில் வளாகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள், பழைய இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு மில் காவலாளி ஜெயராமன் மில்லின் பின்புறம் சென்று பார்த்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பொருட்களை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதைத் தொடர்ந்து ஜெயராமன் சத்தமிட்டவாறே திருடர்களை பிடிக்க முயன்ற போது 4 பேரும் தப்பி ஓடினர். அதற்குள் ஜெயராமனின் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள், மில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய திருடர்களில் மூன்று பேரை விரட்டி பிடித்து சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதைத்தொடர்ந்து பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெங்கமேட்டை சேர்ந்த கவிராஜ் (27), மனோஜ் (19) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி