நம்பியூர்: உரிய உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்த கணவன்-மனைவி கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பெருமாள்கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52). இவருடைய மனைவி ருக்மணி (40). இருவரும் நம்பியூர் அருகே உள்ள செட்டியம்பதி பகுதியில், வாணம், மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் பட்டாசு தயாரித்து வரும் இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பழனிச்சாமியும், ருக்மணியும் தொடர்ந்து உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்து வருவதாக நம்பியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் பழனிச்சாமியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் பட்டாசு தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து, வீட்டில் வைத்திருந்த வாணம், மத்தாப்பு, பட்டாசு உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி