சத்தியமங்கலம்: வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன்னாரி சோதனைச் சாவடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன்னாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடந்து சென்றது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துக்கு உள்ளாகினர். இந்தக் காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் அதிகளவில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி