ஈரோட்டில் போலீசாரின் வாகனச் சோதனை தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையிலும், வாகனச் சோதனையை தீவிரப்படுத்த, மாவட்ட எஸ்பி சுஜாதா போலீசாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.  அதன் அடிப்படையில், மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது, சாலையில் வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதோடு, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். கார் ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணிய போலீசார் அறிவுறுத்துகின்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படுகிறது. 

மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பீக் ஹவர்களில் வாகனங்கள் அதிகம் செல்லும் என்பதால், அந்த நேரத்தை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கைவரிசை காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக, செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களையும் தடுக்கவும் வாகனச் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி