சத்தியமங்கலம்: பஸ்சில் பெண்ணின் 8 பவுன் செயின் மாயம்

கர்நாடகாவில் இருந்து கோவை நோக்கி கர்நாடக மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் சித்ரா என்ற பெண் அந்த பஸ்சில் புளியம்பட்டி செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போழுது பஸ் ஆசனூர் அருகே டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது.

பஸ்சில் இருந்த பயணிகள் டீ குடிப்பதற்காக இறங்கி கடைக்கு சென்றனர். சித்ராவும் டீ குடிக்க சென்றார். பின்னர் டீ குடித்து விட்டு பஸ்சில் ஏறினார். அங்கிருந்து பஸ் கிளம்பியது. அப்போது சித்ரா கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஸ்சை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று அவர் கூறினார். இதை அடுத்து பஸ் பயணிகளுடன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றது. அங்கு போலீசார் ஒவ்வொரு பயணிகளையும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோபியை சேர்ந்த 2 பெண் பயணிகளின் பையை சோதனை செய்த போது அதில் 20 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது புகையிலைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி