சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் கேக் வழங்கி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதையொட்டி பங்குத்தந்தை ரோசாரியோ மற்றும் பாதிரியார் டோனி மார்சல் ஆகியோருக்கு அங்கு கூடியிருந்த இந்து, முஸ்லிம்கள் ரோஜா பூ, இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்கள். மேலும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் தண்டு மாரியம்மன் கோவில் பூசாரி கோபாலகிருஷ்ணன், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். ஐமேஷ், கவிமணி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சேவியர், நகர தலைவர் முகமது பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி