ஆசனூர்: வாகனங்களைத் துரத்திய ஒற்றை யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீரை தேடி சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதுபோல் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வந்து நின்றது. அப்போது அந்த வழியாக வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்களை திடீரென அந்த ஒற்றை யானை துரத்த தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் உயிரைக் கையில் பிடித்தபடி தங்களது வாகனங்களை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றனர். பின்னர் மீண்டும் அந்த ஒற்றை யானை மைசூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே எங்கும் நகராமல் வாகனங்களை வழிமறித்து நின்று கொண்டே இருந்தது. 

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் நெடுஞ்சாலை நடுவே நின்று கொண்டிருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி