ஆசனூரில் லாரி டூல் பாக்ஸில் கடத்தி வந்த 71 கிலோ குட்கா பறிமுதல்

கர்நாடக மாநிலத்தில் இருந்து திம்பம் வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆசனூர் வழியாக லாரியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஆசனூர் போலீசார் சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியை நோக்கி வந்த லாரியைத் தடுத்து நிறுத்திய போலீசார், அதனை சோதனையிட்ட போது, லாரி டூல் பாக்ஸ்சில் இருந்த மூட்டைகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து அந்த லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார் (52), என தெரிய வந்தது. மேலும், லாரியில் இருந்த மொத்தம் ரூ.51,100 மதிப்புள்ள 70.820 கிலோ குட்கா பொருட்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆசனூர் போலீசார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி