ஈரோடு: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் வாலிபர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், வே மென் காட்டுவலசை சேர்ந்தவர் முருகேசன் (31). கூலித்தொழிலாளி. இவரும் குமாரபாளையம், தட்டான் குட்டையைச் சேர்ந்த நண்பரான நடராஜ் (31) ஆகியோர் நேற்று (ஜனவரி 2) இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

இதேபோல் பவானி அடுத்த பெரிய புலியூர் ஜீவா நகரைச் சேர்ந்த கார்த்தி (30), அவரது நண்பரான கிரி ஆகியோர் ஈரோட்டில் இருந்து மீண்டும் பவானி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இரவில் பவானி அருகே பெருமாள் மலை என்ற இடத்தில் வந்தபோது முருகேசன் வந்த மோட்டார் சைக்கிளும், கார்த்தி வந்த மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் குமாரபாளையம் சேர்ந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பரான நடராஜ், பவானி பெரிய புலியூரைச் சேர்ந்த கார்த்தி, கிரி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி