தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் 37 மையங்களில் நடந்த தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 9,168 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், தமிழ் மொழி திறனறித்தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் 27 பேரும், தனியார் பள்ளிகளை சார்ந்த 52 மாணவ-மாணவிகள் என 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 1,500 வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.