ஈரோடு: மின்கட்டணத்தை குறைக்க தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, 75-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பின் சார்பில் கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட 60 சதவீத மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். மேலும், மின் கட்டண உயர்வால் தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் சுமையை சுட்டிக்காட்டியிருப்பதோடு, பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். இந்நிலையில், மின் கட்டணம் மேலும் 3.6 சதவீத உயர்த்துவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிலைக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில், வணிக நிறுவனங்களுக்கும், இதேபோன்று அதிக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கும் கூட, 15 பைசாவிலிருந்து 35 பைசா வரை யூனிட்டுக்கு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு இந்த நிலைக்கட்டண உயர்வையும், மின்கட்டண உயர்வையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், சோலார் பேனல் அமைத்து சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நெட்வோர்க் சார்ஜையும் முற்றிலும் விலக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி