கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கவுந்தப்பாடி பொம்மன்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் குமாரசாமி என்பவர் வளர்த்து வந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 9 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறி உள்ளது. இன்று காலை வழக்கம் போல பட்டிக்குச் சென்று பார்த்தபோது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
மேலும் 1 ஆடு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது. தெரு நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி அய்யம்பாளையம் பிரிவு அருகே கோபி - ஈரோடு சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆடுகளை அவ்வப்போது கடித்து கொள்ளும் நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.