கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 35 டன் விதை நெல் தயார்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனங்களுக்கு கடந்த மே 26 முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீரை கொண்டு விவசாயிகள் நாற்றாங்காலில் விதை நெல்லை விதைத்து நடவு பணியை எதிர்நோக்கி உள்ளனர். 

இந்நிலையில் இரு பாசனங்களிலும், நெல் சாகுபடிக்காக வேண்டி கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏடிஎஸ் 16 ரக விதைநெல், டிபிஎஸ் 5 என இரு ரகங்கள் தலா 43 ரூபாயில் மொத்தம் 50 டன் விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்த விதை நெல் அனைத்தும் தற்போது விற்று தீர்ந்துள்ளது. 

அதே சமயம் வரும் ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு இருக்கும் என்பதால் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இப்போதே பிபிடி 5204 ரகம் என்ற விதை நெல் கிலோ 45 ரூபாய் விலையில் 35 டன் இருப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விதை நெல் தேவைப்படும் கீழ்பவானி பாசன விவசாயிகள் உடனே சங்கத்தில் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி