அய்யலூர்: ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்றதாக, அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச்சந்தை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். 

வெள்ளாடுகளைக் காட்டிலும், செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ. 500 முதல் ரூ. 550 வரையிலும், சண்டைக்குப் பயன்படும் கட்டுச் சேவல்கள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. சுமார் ரூ. 2 கோடிக்கும் மேல் விற்பனை நடந்துள்ளது என்றனர்.

தொடர்புடைய செய்தி