பழனி: தங்கை கணவர் கொலையில் திருநங்கை கைது

பழநி அருகே சித்தரேவில் தவறாக நடக்க முயன்ற தங்கையின் கணவரை கொலை செய்த திருநங்கைஅக்காளை போலீஸார் கைது செய்தனர்.
பழநியை அடுத்துள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துசாமி (32). இவரது மனைவி மாரியம்மாள் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர்களுடன் மாரியம்மாளின் அக்காள் (திருநங்கை) வைதேகியும் (40) வசித்து வந்தார். கடந்த ஏப். 29-ம் தேதி முத்துசாமி காணாமல்போன தாக அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக
போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே மே4ம் தேதி வைதேகியும் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முத்துசாமியின் வீட்டின் அருகில் காலி இடத்தில் மண்ணில் எதையோ புதைத்த அடையாளம் இருந்தது.
சந்தேகத்தின் பேரில் போலீஸார் அந்த இடத்தில் தோண்டியபோது அங்கு முத்துசாமியின் உடல் கிடைத்தது. மேலும், அவரது கொலையில் வைதேகிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்துகாணாமல் போன வைதேகியை போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துசாமி குடித்து விட்டு அடிக்கடி மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், வைதேகியிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை செய்து உடலை புதைத்து விட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து வைதேகியை தாலுகா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி